Archives: மே 2022

புயலை தகர்க்கும் நம்பிக்கை

2021ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் டெக்ஸாஸில், சூழல்காற்றின் அருகே தோன்றிய வானவில்லின் காணொலிகளையும், புகைப்படங்களையும் ஆர்வலர்கள் பதிவுசெய்திருந்தனர். அதில் ஒரு காணொலியில், நீண்ட கோதுமை கதிரின் தண்டுகள் காற்றின் வீரியத்தால் வளைந்திருந்தன, கருவானத்தை துண்டாடிய வானவில், சுழல்காற்றுக்கு முன் கெம்பிரமாய் நின்றது. இன்னொரு காணொலியில், பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு புனல் வடிவ மேகத்தின் அருகே இருந்த அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

சங்கீதம் 107இல் சங்கீதக்காரன், கடினமான தருணங்களில் தேவனிடத்திற்கு திரும்பும்படிக்கு நமக்கு நம்பிக்கைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அந்த புயலின் நடுவில் இருப்பவர்களின் “ஞானமெல்லாம் முழுகிப்போகிறது” (வச. 27) என்று விவரிக்கிறார். “அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்” (வச. 28). 

வாழ்க்கையில் புயல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கையோடு செயல்படுவதற்கு தேவனுடைய பிள்ளைகள் தடுமாறுவார்கள் என்பதை தேவன் அறிவார். நம்முடைய பாதை இருளாயிருக்கும்போது, அவருடைய நன்மைகளை நினைவுகூருதல் அவசியம். 

உணர்வு ரீதியான புயலோ, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றோ நம் வாழ்வை கலங்கடிக்கும்போது, தேவன் அதையே அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாற்றி நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார் (வச. 29-30). நாம் எதிர்பார்த்த நேரத்தில் நமக்கு நன்மை கிட்டவில்லையென்றாலும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் அவர் உண்மையுள்ளவர் என்று அவரையே நம்புவோம். எப்பேர்ப்பட்ட புயலையும் தகர்க்க அவர் என்றென்றும் நம்பத்தக்கவரே.

முழு உலகத்திற்கும் சுகம்

இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் பல அலுவலர்களைக் கொண்ட ஒரு மருத்துவ அமைப்பு (ப்ரான்ஜா பார்டிசன் மருத்துவமனை), நாசிச கிளர்ச்சியாளர்களுக்கு மறைவாக, மேற்கு ஸ்லோவேனியாவின் ஒரு வனப்பகுதியில் மறைந்து செயல்பட்டனர். அதைக் கண்டுபிடிக்க நாசிச அமைப்பினர் ஏறெடுத்த பல முயற்சிகள் வீணாய் போனது. அவர்களின் கண்களுக்கு மறைந்து செயல்பட்டதே பெரிய சாதனை. அதை பார்க்கிலும் பெரிதானது, நேச நாடுகளிலிருந்தும், எதிரி நாடுகளிலிருந்தும் காயப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களையும் அந்த அமைப்பு பராமரித்தது தான். அந்த மருத்துவமனை அனைவரையும் வரவேற்றது. 

முழு உலகமும் ஆவிக்குரிய சுகம் பெற நாம் உதவும்படி வேதம் நம்மை அழைக்கிறது. அதாவது, நாம் பாகுபாடில்லாமல் அனைவர் மீதும் இரக்கம் செலுத்தவேண்டும் என்று அர்த்தமாகிறது. யாராக இருந்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பிற்கும் இரக்கத்திற்கும் பாத்திரவான்கள். பவுல், “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க...” (2 கொரிந்தியர் 5:14) என்று அனைவரையும் அரவணைக்கும் இயேசுவின் அன்பை குறிப்பிடுகிறார். பாவ நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மன்னிப்பு எனும் சுகம் நம் அனைவருக்கும் அவசியம். அவர் நமக்கு மன்னிப்பைக் கொடுக்க நம்மிடத்தில் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். 

தேவன் ஆச்சரியவிதமாய், “ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை” (வச.19) நம்மிடத்தில் ஒப்புவித்துள்ளார். நம்மைப் போல் காயப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்ய நம்மை அழைக்கிறார். தேவனோடு ஒப்புரவாகுதலின் மூலம், பாவநோயாளிகள் குணமாகும் மருத்துவ அமைப்பில் நாமும் அங்கத்தினராய் செயல்படுகிறோம். இந்த ஒப்புரவாகுதலும், சுகமும் விரும்புகிற யாவருக்கும் கொடுக்கப்படுகிறது. 

சற்று நிறுத்தி ஜெபியுங்கள்!

வீதியிலிருந்த தீயணைப்பு குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடைத்தது. அது எனக்கு ஒரு வாய்ப்பாய் தெரிந்தது. எனக்கு முன், பல கார்கள் அதின் தண்ணீரால் தங்களை சுத்தம் செய்துக் கொண்டது. 'காரை சுத்தம் செய்வதற்கு என்ன அருமையான இலவச வாய்ப்பு!' என்றெண்ணினேன். மாதக்கணக்காய் என் காரை கழுவவில்லை. அதினால் அழுக்கு அடர்த்தியாய் படிந்திருந்தது. ஆகையால் நானும் என் காரை அந்த தண்ணீருக்குள் செலுத்தினேன். 

அவ்வளவுதான், 'க்ராக்!' என்று சத்தம் கேட்டது. அன்று காலைல்தான் சூரிய ஒளி என் கருப்புநிற காரின் கண்ணாடி, உட்பகுதியையும் சூடேற்றியிருந்தது. தீயணைப்புக் குழாயிலிருந்து வந்த தண்ணீரோ உறைந்திருந்தது. இந்த குளிர்ந்த நீர் சூடான கண்ணாடியின் மேல் பட்ட மாத்திரத்தில், மேலிருந்து கீழாக விரிசல் ஏற்பட்டது. என் 'இலவச கார் சலவை', அதிக செலவையே உண்டுபண்ணியது. 

அதை செய்வதற்கு முன்பாக சற்று நேரமெடுத்து யோசித்திருந்தால் அல்லது ஜெபித்திருந்தால் நலமாயிருந்திருக்கும். அப்படிப்பட்ட தருணம் உங்களுக்கு நேரிட்டிருக்கிறதா? இஸ்ரவேலர்கள் இதைவிட கடினமான சூழ்நிலைகளில் இதை அனுபவித்துள்ளனர். தேவன் அவர்களுக்குக் கொடுக்கும் தேசத்தின் குடிகளை விரட்டியடிப்பதாக அவர்களுக்கு வாக்குப்பண்ணியிருந்தார் (யோசுவா 3:10). எனவே, அவர்கள் அந்நிய தேவர்களால் ஈர்க்கப்பட அவசியமில்லாதிருந்தது (உபாகமம் 20:16-18). ஆனால் ஒரு புறஜாதி தேசம், இஸ்ரவேலர்களின் வெற்றிகளை பார்த்து பயத்தினால், உலர்ந்து பூசணம் பூத்த அப்பத்தை  உண்ணக் கொடுத்து, தாங்கள் தூர தேசத்தில் வசிப்பவர்களென்று இவர்களை நம்பச் செய்தார்கள் . “அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்”. (யோசுவா 9:14-15). யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணினான். இது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமானது. 

நாம் ஜெபத்தை இறுதியாய் அல்லாமல் முதன்மையாய் வைத்து தீர்மானம் எடுக்கும்போது, தேவனுடைய வழிநடத்துதலையும், ஞானத்தையும், ஆசீர்வாதத்தையும் எதிர்நோக்குகிறோம். சற்று நேரம் நின்று யோசிப்பதற்கு தேவன் இன்று நமக்கு நினைப்பூட்டுவாராக.

இடுக்கமான வாசல் உணவகம்

சுவையான நொருக்குத் தீனிகள், பாலாடைக் கட்டிகள், இறைச்சி என்று அனைத்து வகை சுவையான உணவுகளும் இந்த இடுக்கமான வாசல் உணவகத்தில் உங்களுக்கு காத்திருக்கிறது. தைவானிய நகரமான தைனான் என்ற ஊரிலிருக்கும் இந்த உணவகம், பார்ப்பதற்கு சுவரைக் குடைந்து ஓட்டை ஏற்படுத்தியதுபோலவே இருக்கும். அதின் நுழைவாயில் வெறும் 40 செ.மீ அகலமே கொண்டது. ஒரு சராசரி உடல்வாகு கொண்ட நபர் சிரமப்பட்டு உள்ளே போகலாம். இருப்பினும், அந்த உணவகம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த இடுக்கமான வாசல் லூக்கா 13:22-30இல் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்திருக்குமா? சிலர் இயேசுவைப் பார்த்து, “இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” (வச.23) என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (வச.24) என்று சவால் விடுகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்களா? என்று இந்த ஒப்புமையை பயன்படுத்தி யூதர்களின் ஆணவத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும், நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதினால் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்று யூதர்களில் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு” (வச. 25) ஒன்றும் செய்ய இயலாது என்பதினால் அவர்களை முன்பாகவே செவிகொடுக்கும்படி எச்சரிக்கிறார். 

நம்முடைய குடும்ப பின்னணிய பெருமையும், நம்முடைய நற்கிரியைகளும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்காது. இயேசுவில் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்புவிக்கும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:5-7). வாசல் இடுக்கமானது, ஆனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விசாலமாய் அமைந்திருக்கிறது. இந்த இடுக்கமான வாசல் வழியாய் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த அவர் இன்று நம்மை அழைக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்